Wednesday 14 January 2015

எச்சரிக்கை விடும் இலங்கை ஆசிரியர் சங்கம்........

மைத்திரிபால சிறிசேன  ஜனாதிபதி ஆனதால் தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு வந்து விட்டதாக அதி புத்திசாலித்தனமாக எண்னும் தமிழர் ஆசிரியர் சங்கம் இந்தியாவின் அரசியல்வாதி விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூற்றில் பிழை கண்டு அதனை எதிர்த்து அறிக்கை ஒன்றினை விடுத்துள்ளது.
போரின் போது தமிழ் ஆசிரியர்கள், மாணவர்கள் குற்றுயிரும் குறை உயிருமாக கிடந்தபோது அறிக்கைவிடாத  ஆசிரியர் சங்கம், அரசியல் வாதிகளாலும், ஆளுனராலும், மற்றும் அதிகாரிகளாலும் சக ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டபோது  சும்மா இருந்த ஆசிரியர் சங்கம் இப்போது அறிக்கை வெளியிட்டிருப்பதன் நோக்கம் என்ன? அறுபது ஆண்டுகால அரசியல்,ஆயுதப்போராட்டம், லட்சக்கணாக்கான உயிர் இழப்பு இவை தமிழ் மக்களுக்குப் பெற்றுத்தராமல் போன ஒரு தீர்வை மகிந்தவின் ஆட்சியில் அமைச்சராக இருந்த ஒருவரால் வழங்கமுடியுமா?நரிப்  புத்தி கொண்ட ரணிலுடன் கூடுச்சேர்ந்து ஆட்சிப்பீடம் ஏறியுள்ளார் என்பது ஒருபுறமிருக்க, இராணுவத்தினை வடபகுதியில் இருந்து வாபஸ் பெறமாட்டேன்,வெளிநாடுகளில் எஞ்சியுள்ள புலிகளையும் அழிப்பேன் என்று கூறிக்கொண்டுதான் வந்துள்ளார் இவர். ஒருவேளை அறிவித்த சம்பளத்தை அதிகரித்துக் கொடுக்கலாம், அதுவும்  பொறுத்திருந்து பார்ப்போம் 100 நாட்கள். 
அந்த அறிக்கை வருமாறு:- காலம் காலமாக இலங்கையில் உள்ள இலங்கைத் தமிழர்கள் படுகின்ற துன்பங்களும், துயரங்களும் எண்ணிலடங்காதவை.இந்தியாவின் தமிழ்நாட்டில் வாழுகின்ற தமிழ்பேசும் ஒருசில தலைவர்கள் இத்துன்பங்களை தமக்குச் சாதமாகப் பயன்படுத்தி அரசியல் இலாபம் தேடுவது சாதாரணமான விடயமாக இருந்தாலும், தற்போது இலங்கையில் நடைபெற்று முடிவடைந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன தெரிவுசெய்யப்பட்டுள்ளமை தமிழர்களின் மனங்களில் ஓரளவுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ள தருணத்தில் தமது உசுப்பேத்தும் பாணியை தமிழகத் தலைவர்களுள் ஒருவரான தொல்திருமாவளவன் தொடங்கியிருப்பது வேதனை தருகின்ற விடயமாகும்.
ஆட்சிமாற்றத்தை விரும்பிய தமிழ் மக்கள் மைத்திரிக்கு வாக்களித்தனர். அதனால் அவர் தமிழர்களின் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றார். இதனை ‘‘ராஜபக்ஸவும் மைத்திரியும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்” என்று தொல்திருமாவளவன் கூறியிருப்பது. தற்போது தோன்றியுள்ள தமிழர் மீதான அனுதாபத்தையும் அழித்து விடும்.உங்கள் அரசிலுக்காக இலங்கைவாழ் தமிழ் மக்களை பலிக்கடாக்களாக்குவதையும், ஊசுப்பேத்திவிடுவதையும் நிறுத்திக் கொள்ளுங்கள்.
 நீங்கள் கூறுகின்ற வார்த்தைகள் உலக அரங்கில் மாற்றங்கள் எதனையும் கொண்டு வரப்போவதில்லை. இதுவரை அவ்வாறான மாற்றங்கள் நிகழ்ந்ததாகவும் இல்லை.மக்கள் அழிந்தபோது நீங்கள் எங்கே இருந்தீர்கள் என்ற வினாவை ஒருமுறை உங்களிடமே கேட்டுப்பாருங்கள். மாறாக இங்குள்ள தமிழ் மக்களாகிய நாம் படுகின்ற துன்பங்களும், சுமைகளும் உங்களுக்கு பஞ்சுமெத்தைகளைத் தருகின்றன.இனிமேலும் இதுபோன்ற கருத்துக்களை முன்வைத்தால் உலகளாவிய ரீதியில் உள்ள ஆசிரியர்களுக்கூடாக உங்களைக் கண்டிக்க வேண்டியிருக்கும்.என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தமது அறிக்கையில் தெரியப்படுத்தியுள்ளது.